Friday 28 February 2014




ஜோதிடம் பார்க்கும் போது,ஜோதிடராகிய நாம் நம்மையறியாமலேயே சில பலன்களை சொல்வது வழக்கம்;அதாவது ஜோதிட விதிகளை மீறியோ அல்லது ஜோதிட விதிகளுக்கு எதிராகவோ பலன்களைச் சொல்வது வழக்கம்;இது ஒவ்வொரு ஜாதகம் பார்க்கும்போதும் நம்மையறியாமல் பலன் சொல்வது இயல்பு.இப்படிப்பட்ட சூழ்நிலை அடிக்கடி வந்தால் நம்மிடம் ஏதோ ஒரு தெய்வீக சக்தி/முன்னோர்களின் ஆவி/குலதெய்வ அருள்/முன்னோர்களின் அருள் நமது உள்ளுணர்வின் மூலமாக வெளிப்படத் துவங்கியிருப்பதாக அர்த்தம்.


அடிக்கடி நாம் வானில் பறப்பதாக கனவு வந்தால் இப்பிறவியில் நமக்கு ஒன்று அல்லது ஒருசில தெய்வீக சக்திகள் கிடைக்கப் போவதாக அர்த்தம்.ஆதாரம்:ஆன்மீக ஆராய்ச்சிகள்.


தினமும் ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று வந்தாலே நமது உள்ளுணர்வு சக்தி அதிகரிக்கும்;8.8.2004 இந்த தேதியன்று நான் வசிக்கும் தெருவிற்கு பக்கத்து தெருவிற்குச் சென்றேன்.அங்கே ஒரு அம்மன் கோவில் இருந்தது;அன்று காலையில் தான் எனது நண்பனின் அம்மாவை அவரது வீட்டில் சந்தித்தேன்; ‘தம்பி,நம் கணேசனுக்கு நீதான் பொண்ணு பார்க்கணும்’ என்று அவனது பிறந்த ஜாதக நகலைக் கொடுத்தார்.அந்த ஜாதக நகலுடன் நான் இந்த அம்மன் கோவிலுக்கு வந்தேன். கோவிலானது தெருவிற்குள் வீடுகளுக்கு நடுவே அமைந்திருந்தது.அப்போது சரியாக மதியம் 2.30 ! அம்மனை வழிபட்டுவிட்டு,அங்கே இருந்த சந்தனக் கிண்ணத்தில் இருந்து சந்தனத்தை எடுத்து அந்த ஜாதக நகலின் நான்கு மூலைகளிலும் தடவிவிட்டு,சில நிமிடம் உட்கார்ந்திருந்தேன்.கோவிலில் யாரும் இல்லை;


கோவிலை விட்டு வெளியே வந்தேன்.நான்கு பேர்கள் எதிர்ப்புறத்தில் இருந்து வந்தனர்;அந்த நான்குபேர்களில் ஒருவர்,என்னுடன் 12 ஆம் வகுப்பு வரை படித்தவன். அவனிடம், ‘இந்தத் தெருவில் திருமணத்தரகர் என்று யாரும் இருக்கிறாங்களா?’ என்று கேட்டேன். அவன், தன்னுடன் வந்த ஒருவரைக் காட்டி, ‘இதோ இவர் தான் கல்யாணத் தரகர்’ என்றான். எனக்கோ இன்ப அதிர்ச்சியாக இருந்தது.அவரிடம் அந்த ஜாதக நகலைக் கொடுத்து, மறுநாள் அவரை அழைத்துச் சென்று நண்பனின் அம்மாவிடம் அறிமுகப்படுத்தினேன்.


அதே சமயம்,இந்த சம்பவம் யாதார்த்தமாக நிகழ்ந்ததா? இல்லை இந்த அம்மன் கோவிலுக்குப்போய்விட்டு வந்ததால் நிகழ்ந்ததா? என்ற கேள்வி உடனே எனக்குள் எழுந்தது.இதை எப்படி கண்டுபிடிப்பது?தினமும் ஒரு கோரிக்கையோடு இந்த அம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டுப் பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தேன்.
அந்த நாள் தான் 8.8.2004! அன்றிலிருந்து இன்று 1.3.2014 வரை ஒரு நாள் விடாமல் இந்த அம்மன் கோவிலுக்குச் சென்று வருகிறேன்.ஆமாம்! இதனால் வாழ்க்கை விறுவிறுப்பாகவும்,நிம்மதியாகவும்,மனமகிழ்ச்சியாகவும் மாறத் துவங்கிவிட்டது.


8.9.2004க்குள்ளாகவே,அதாவது ஒரு மாதத்திற்குள்ளாகவே என்னுடன் பழகுபவர்களில் என் மீது அக்கறையாக இருப்பவர்கள் போல நடித்துக் கொண்டு எனக்கு தவறான வழிகாட்டுபவர்களின் நோக்கங்கள் எனக்குப் புரிந்தன;அதே சமயம்,என்னைத்தீட்டிக்கொண்டே இருந்தவர்கள் என் மீது எந்த அளவுக்கு உண்மையான அக்கறையும் அன்பும் கொண்டிருந்தார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டேன்.இதற்கு அந்த அம்மனை தினமும் வழிபட்டு வந்ததே காரணம்.


ராகு மஹாதிசை நடந்தாலோ,நமது லக்னாதிபதி ராகுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ,நமக்கு இப்போது நடைபெறும் திசைக்குரிய கிரகம் ராகுவின் நட்சத்திரத்தில் நின்றாலோ அல்லது ராகுவுடன் சேர்ந்து நின்றாலோ புலனாய்வுத்திறன் கைக்கூடும்; எனது புலனாய்வுத் திறனை இப்படித்தான் பக்திக்குத் திருப்பும் விதமாக எனது வாழ்க்கை அமைந்தது.ஓரிரு ஆண்டுகளில் அம்மாவைக் கேட்காமல்(பூ கட்டிப்பார்ப்பது) எந்த காரியமும் செய்வதில்லை என்ற அளவுக்கு உயர்ந்தேன்.
பல நூற்றுக்கணக்கான சம்பவங்கள் மூலமாக திரும்பத் திரும்ப அந்த அம்மனின் சக்தியை புரிந்துகொண்டதால், என்னிடம் ஜோதிடம் பார்க்க வருபவர்களிடம் அம்மனைத் தினமும் வந்து தரிசிக்கும்படி வலியுறுத்தத் துவங்கினேன். பிளாக்கரை கூகுள் வாங்கி,யார் வேண்டுமானாலும் இணையத்தில் எழுதலாம் என்ற சூழ்நிலை உருவானதும், இணையத்தில்  எப்படி இந்த அம்மனின் அருளைப் பெற்றேன்? என்பதை தொடராகவே எழுதத் துவங்கினேன்.

எனது வீட்டில் இருந்து புறப்படத் துவங்கியதும்,வீட்டு வாசலைத் தாண்டியதும் எனது மனதிற்குள் ‘வராதே’ என்ற வார்த்தை மட்டும் தோன்றும்.உடனே, நான் நினைப்பேன்; அம்மா நம்மை சோதித்துப்பார்க்கிறாள்; அவள் சொன்னாலும் அவளை தரிசிக்காமல் வேலைக்குப் போகக் கூடாது என்ற எண்ணத்துடன் பக்கத்துத் தெருவில் அமைந்திருக்கும் அந்த அம்மன் கோவிலுக்குச் செல்வேன். போய்ப் பார்த்தால், அந்தத்  தெருவில் அன்று யாராவது இறந்திருப்பார்கள்; அதனால் கோவில் பூட்டப்பட்டிருக்கும்; அப்போதும் மனதிற்குள் ஒரு பெருமையே தோன்றும்; நம்மை மகனாக நினைப்பதால் தான் அம்மா நமது நேரத்தை வீணடிக்காமல் இருக்க வராதே என்று சொல்லியிருக்கிறாள் என்று நினைத்து வாசலில் நின்றே வழிபட்டுவிட்டு வேலைக்குப் போயிருக்கிறேன்.இந்த மாதிரியான சம்பவம் பல தடவை நிகழ்ந்திருக்கிறது.

நான் வசிக்கும் தெருவிலேயே ஒரு குடும்பம் வாழ்ந்து வந்தது.அவர்களுக்கு என்னைப்போலவே இரு மகள்கள்! அந்தக் குடும்பம் ஒருமுறை ஜாதகம் பார்க்க வந்தது. அவர்களில் ஒரு மகளுக்கு ராகு மஹாதிசை அப்போது தான் துவங்கியிருந்தது.எனவே,அவர்களை இந்த அம்மன் கோவிலுக்கு தினமும் சென்று வரும்படி ஜோதிடம் சொன்னேன்.

ஒருமாதம் கழிந்தது.மீண்டும் அதே குடும்பத்தினர் அந்த அம்மன் கோவிலுக்கு ஒரே ஒரு நாள் சென்றதால் ஏற்பட்ட அதிசயத்தைச் சொன்னார்கள். முதல் நாள் குடும்பத்துடன் கோவிலுக்கு இரவு 7 மணிக்குச் சென்றிருக்கிறார்கள். சென்றுவிட்டு வீடு திரும்பியதும்,வீட்டு வாசலில் அந்த இல்லத்தரசியின் அப்பா ஒரு மஞ்சள் பையுடன் காத்துக் கொண்டிருந்தார். அவரை இவர்கள் வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

“நீ இனிமே வட்டி கட்ட வேண்டாம்.இந்தா நீ கேட்ட ரூ.50,000/-  நீ எனக்கு வட்டி தர வேண்டாம்.இதைக்கொண்டு அந்த கடனை அடை.உன்னால் எப்போ முடியுமோ அப்போ இந்த அம்தாயிரத்தைத் தந்தால் போதும்” இந்த இல்லத்தரசிக்கு ஆனந்தக் கண்ணீர் வந்தது; ஆனால்,அந்த ஒரு நாளுக்குப்பிறகு அவர்கள் எவருமே அந்த அம்மன் கோவிலுக்குப் போகவில்லை;

ஒழுங்காக வேலைக்குப் போய்க் கொண்டிருந்த தனது கணவனை கட்டாயப்படுத்தி,பெட்டிக்கடை துவங்க வைத்திருக்கிறாள் அந்த இல்லத்தரசி.தொழிலின் நெளிவு சுழிவு தெரியாததால், ஒரே ஆண்டுக்குள் கடன் ரூ.50,000/-வந்து விட்டது. அதை அடைக்க ஒருவரிடம் ரூ.50,000/-கடன் வாங்கி,அதற்கு நான்கு ஆண்டுகளாக வட்டி கட்டிக்கொண்டிருக்கின்றனர்.வீட்டில் இருந்த இல்லத்தரசி வேலைக்குப் போக ஆரம்பி,கணவன் மீண்டும் வேலைக்குப் போக ஆரம்பித்திருக்கிறான்.கணவனின் சம்பளம் அப்படியே முழுசாக வட்டிக்குப் போக மனைவியின் சம்பளத்தில் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த கஷ்டமான சூழ்நிலையை தனது அப்பாவிடம் சொல்லியிருக்கிறாள் அந்த இல்லத்தரசி.சொல்லி அப்பாவிடமே ரூ.50,000/-கடன் கேட்டிருக்கிறாள்.இப்படி அவள் கேட்டு,கேட்டே அப்பாவுக்கும்,மகளுக்கும் ஒரு கட்டத்தில் சண்டையே வந்து இருவரும் பேசிக்கொள்வதில்லை; இந்த சூழ்நிலையில் தான் எம்மிடம் ஜோதிடம் பார்த்து ஒரே ஒரு நாள் அந்த அம்மனின் கோவிலுக்குச் சென்று, அதே அப்பா தனது இறுதி கால சேமிப்பை மகளின் கடனை அடைக்கக் கொடுத்திருக்கிறார்.

இந்த அம்மன் கோவிலில் ஒவ்வொரு மஹாசிவராத்திரியன்றும் இரவில் ஒரு பாட்டி வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவார்.அப்படி சுட்ட அப்பத்தை அம்மனின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து பக்தர்களுக்குப் பரிமாறுவது 400 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் நடைமுறை.இந்த அம்மன் கோவில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டியில் அமைந்திருக்கிறது.இந்த அம்மனின் பெயர் பத்திரகாளியம்மன்.3000 நெசவாளர் குடும்பங்களுக்கு குலதெய்வமாகத் திகழ்ந்து வருகிறது.கேட்டவர்களுக்கு கேட்டவரம் தருபவளே இந்த பத்திரகாளியம்மன்!!!

No comments:

Post a Comment