Wednesday 19 December 2012

ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்போது நமக்குள் நிகழ்வது என்ன?



பஞ்சாட்சரம் எனப்படும் மந்திரமான ஓம்நமச்சிவாய உலகத்தில் மட்டுமல்ல;பிரபஞ்சத்தில் இருக்கும் அனைத்து உலகங்களிலுமே உயர்ந்த மந்திரம் ஆகும்.எந்த ஒரு சிவாலயத்துக்குச் சென்றாலும்,ஓம் நமச்சிவாய என்று ஒன்பது முறை ஜபிக்கலாம்;அதற்கும் மேலாக தினமும் ஜபித்து வந்தால்,சில வாரங்களுக்குப் பிறகு அவ்வாறு ஜபித்தவர் துறவுமனப்பான்மையை அடைந்துவிடுவார்;சில மாதங்கள் வரை தொடர்ந்து ஓம்நமச்சிவாய ஜபித்து வந்தால் அவரால் வீட்டில் வாழ முடியாத மனநிலை உருவாகிவிடும்.இது தொடர்பாக யார் வேண்டுமானாலும் ஆன்மீக ஆராய்ச்சி செய்து பார்க்கலாம்.
குடும்பக் கடமைகளை நிறவேற்றிக்கொண்டே,சிவ அருள் கிடைப்பதற்காக நமது ஆன்மீக குரு,ருத்ராட்சத்துறவி மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் நமக்கு கண்டுபிடித்துக்  கொடுத்த சிவ மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும்.எல்லா கோவில்களின் நுழைவு வாயில்களிலும் சிவசிவ என்று எழுதியிருப்பதை பார்த்து வருகிறோம்.ஒருவர் தினமும் 108 முறை சிவசிவ என்று ஜபித்து வந்தாலும்,சில வாரங்களில் அவர் துறவு மனப்பான்மையை எட்டிவிடுவார்;சில மாதங்கள் வரையிலும் ஒரு நாள் விடாமல் தினமும் 108 முறை வீதம் சிவசிவ என்று ஜபித்து வந்தால்,அவர் தனது அனைத்து பந்தபாசங்களில் இருந்தும் விலகிச் சென்று விடுவார்;மனிதர்கள் வாழும் நகர/கிராமப் பகுதியில் இருக்க அவருக்குப் பிடிக்காமல் போய்விடும்;ஒரு வருடத்துக்கும் மேலாக ஒருவர் தினமும் 108 முறை சிவசிவ என்று ஜபித்தால்,அவர் துறவியாகிவிடுவார். ஆனால்,அவர் துறவியானாலும்,அவரதுபிறந்த ஜாதகத்தில் அமைந்திருக்கும் நவக்கிரகங்கள் அவரை அவரது கர்மங்களை நோக்கி இழுக்கவே செய்யும்.அப்போது அவர் காமம் சார்ந்த தவறுகள் செய்யத் துவங்கிவிடுவார்; இந்த சூழ்நிலை ஆண்,பெண் என அனைவருக்கும் பொருந்தும்.

ஓம்நமச்சிவாய மந்திரத்திலிருந்து சுமார் 20000 சிவ மந்திரங்களை நமது முன்னோர்களாகிய சித்தர்கள் கண்டறிந்துள்ளார்கள்.அவைகளில் பல சிவ மந்திரங்களை ஜபிக்கும் தகுதி நமக்கு கிடையாது;சில சிவ மந்திரங்கள் தொடர்ந்து மூன்று பிறவிகளாக பிரம்மச்சாரியாக இருந்தால் மட்டுமே ஜபிக்க வேண்டும்.அந்த மந்திரத்தில் இருக்கும் வார்த்தைகள் இவைதான் என்று அறியும் ஞானம் கூட (தற்காலத்தில்) நம்மில் பலருக்குக் கிடையாது.

 “ ஓம்நமச்சிவாய மந்திரத்தை தினமும் ஒன்பது முறை யார் வேண்டுமானாலும் ஜபிக்கலாம்;அதற்கும் மேலே ஜபிக்க வேண்டும் எனில்,தகுந்த சிவாச்சாரியாரிடம் சிவ தீட்சை பெற வேண்டும்;சிவ தீட்சை பெற்றப்பின்னர், அதற்குரிய விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்என்று  நமக்கு அறிவுறுத்தக்கூடிய துறவிகளோ,மகான்களோ,ஆன்மீக வழிகாட்டிகளோ இல்லை!!

பூமி விண்வெளியில் ரவி எனப்படும் சூரியனை சுற்றி வருகிறது;ஒரு முறை ரவியைச் சுற்றி வர சுமார் ஒரு வருடம் ஆகிறது.அப்படி சுற்றி வருவதோடு,தன்னைத் தானே சுற்றி வருகிறது;தன்னைத் தானே பூமி சுற்றிவருவதால் விண்வெளியில் மிகப் பிரம்மாண்டமாக ஓம் என்ற ஒலி உண்டாகிறது.சிவ சிவ என்ற மந்திரத்தின் முன்னும் பின்னும் ஓம் என்னும் மந்திரத்தை சேர்க்கும் போது அது குடும்பஸ்தர்களுக்கு ஏற்ற மந்திரமாக மாறிவிடுகிறது.பூமியின் இயக்கத்தோடு இணைந்து வாழ்ந்து இறை அனுபவம் பெறக்கூடிய சூழ்நிலையும் உருவாகிவிடுகிறது.எனவே தான் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வலியுறுத்துகிறோம்;


நமது  குடும்பக் கடமைகளை நிறைவேற்றிக்கொண்டே நாம் சிவ சிந்தனையில் ஈடுபடவும்,நாம் இறையருளைப்  பெறவும் ஏற்ற மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும். ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு முறைப்படி தீட்சை கூட வாங்க வேண்டிய அவசியம் இல்லை; ஆனால், ஓம்நமச்சிவாய மந்திரத்தை விடவும் விரைவாக உயிரூட்டம் பெறும் மந்திரம் ஓம்சிவசிவஓம் ஆகும்.
நாம் நமது ஜாதகப்படி எந்த யோகத்தில் பிறந்திருந்தாலும் சரி,அல்லது எந்த தோஷத்தில் பிறந்திருந்தாலும் சரி,அவை அனைத்தையும் நீக்கி நம்மை நிம்மதியாகவும் செல்வச் செழிப்போடும் வாழ வைக்கும் மந்திர ஜபம் ஓம்சிவசிவஓம் ஆகும்.
ஒரே இடம்,ஒரே நேரம் என்ற கொள்கை அடிப்படையில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க நம்மை பழகிக் கொள்ள வேண்டும்.(நமது வீட்டில் எந்த இடத்தில் முதல் நாளன்று ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கிறோமோ, அதே இடத்தில் மட்டும் தினமும் ஜபித்து வர வேண்டும்;தினமும் எந்த நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தோமோ,அந்த நேரத்தில்=முடிந்த  வரையிலும் ஜபித்து வருவதால் அற்புதமான பலன்களை உணரலாம்)

இப்படிப்பழக்கப்படுத்துவதன் மூலமாக ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தில் சக்தியை ஓரிரு மாதங்களில் உணரத் துவங்கலாம்.ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்த முதல் 15 நாட்களுக்கு சிலருக்கு ஒரு மாதம் வரையிலும் மனக்குழப்பம் வரத் தான் செய்யும்.ஏனெனில்,நமது விதியை நாமே ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்குவதன் மூலமாக மாற்றத் துவங்குகிறோம்;அதனால்,நாம் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கிய ஒவ்வொரு நாளுமே ஜபிக்கும் நேரத்தில் தேவையில்லாத சிந்தனைகள்,காட்சிகள்,மனக்குழப்பங்கள் வரத் தான் செய்யும்.மன உறுதி உள்ளவர்களுக்கு 16 வது நாளிலிருந்தும், மன உறுதி குறைவாக இருப்பவர்களுக்கு 31 வது நாளிலிருந்து மனக்குழப்பங்கள் முழுமையாக விலகிவிடும்.

ஆறு மாதங்கள் வரையில்(சிலருக்கு ஒன்பது மாதங்கள் வரையிலும்) தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,அவர்கள் வாழ்ந்து வரும் இடத்தில் அவர்களே சக்திவாய்ந்த மனிதராக இருப்பார்;அவர் சிடுமூஞ்சியாக இருந்தால்,கலகலப்பானவராக மாறிவிடுவார்; எப்போதும் கவலைப்படுபவராக இருந்தால்,அந்த கவலைகளை ஒழித்துக்கட்டும் வல்லமையை அடைந்துவிடுவார்;நிறைய கடன்களோடு இருந்தால்,அந்த கடன்கள் தீர வழி கிடைக்கத் துவங்கும்;பலவித அல்லது ஓரிரு கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாகி இருந்தால் அத்தனை பழக்கங்களும் அவரை விட்டு விலகிச்செல்லத் துவங்கிவிடும்.

ஒரு வருடம் வரை தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்து முடித்திருந்தால்,நமது உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு நாடி மையம் மற்றும் வர்மமையங்களிலும் நமது ஜப எண்ணிக்கை ஒருமுறை பதிவாகியிருக்கும்.நாமே சிவ அம்சமான ருத்ரனாகிவிடுவோம்;ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் தொடர்ந்து பத்து ஆண்டுகளுக்கு தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,நமது உடலில் இருக்கும் ஒவ்வொரு சக்தி மையத்திலும்(நாடிகள் மற்றும் வர்மப் புள்ளிகள்) நூறுமுறை ஓம்சிவசிவஓம் மந்திர ஆற்றல் நிரம்பியிருக்கும்.ஆறு அல்லது ஏழாம் ஆண்டிலிருந்தே நாம் ,நம்மைச் சுற்றியிருப்பவர்களின் எண்ண ஓட்டங்களைத் தாமாகவே அறியும் குணத்தைப் பெற்றுவிடுவோம்;நமக்கு சில சிவ தரிசனங்கள் கிடைத்திருக்கும்; ஜோதிட பலன்கள்,நவக்கிரக பாதிப்புகள்,பஞ்சபூத பாதிப்புகள் என்று எதுவும் நம்மை அண்டாது;நாமே சித்த சக்தியாக உருமாறிவிடுவோம்; அப்படி மாறினாலும்,நாம் நமது  குடும்ப மற்றும் சொந்தக் கடமைகளை கைவிடமாட்டோம்;

ஜாங்கிரி என்று சொன்னால் நாவில் இனிப்புச் சுவையை அறிய முடியாது;இவ்வளவு பதிவுகளை வாசித்தால் மட்டும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபத்தின் சக்தியை அறிய முடியாது;(இந்த புகைப்படங்களுக்குள் ஒளிந்திருக்கும் சூட்சும சக்திகளை அறியத் துவங்கியிருப்போம்!!!)

ஓம்சிவசிவஓம்
 நன்றிகள் : குருநாதர்

No comments:

Post a Comment