Thursday 22 December 2011

சனிப்பெயர்ச்சி : - அணைத்து ராசியினருக்கும் துல்லியமான சோதிட பலன்கள்

மேஷம்: இதுவரையிலும் ஆறாமிடத்தில் இருந்துவந்த சனிபகவான்,உங்களை படுசுறுசுறுப்பாக வைத்திருந்திருப்பார்;தொழில்,வேலை எதுவாக இருந்தாலும் ஓய்வேயில்லாமல் ஓடிக் கொண்டே இருந்திருப்பீர்கள்.கடந்த ஆறுமாதங்களாக ஒரு வித டல் ஏற்படத் துவங்கியிருக்கும்.ஆமாம்,இன்று முதல் ஏழாமிடத்திற்கு சனி வருகிறார். இனி நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் கூர்ந்த கவனத்தோடு செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால்,ஒரு வேலையை ஒரே தடவையில் முடிக்க முடியாமல் போகும்.21.12.11 முதல் 1.7.12க்குள் ஒரு மிகப்பெரிய அதிர்ஷ்டம் தங்களை வந்துசேரும்.15.12.12 முதல் 23.1.13க்குள் உங்கள் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படும்.எனவே, மனக்கட்டுப்பாட்டுடன் இருக்க இப்போதே பழகுங்கள்.

ரிஷபம்:ஜன்மத்தில் கேது இருந்தாலும்,ஆறாமிட சனியால்,அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அசுர வளர்ச்சி உங்களுக்கு ஏற்படும்.வீண் செலவுகளை கட்டுப்படுத்தி,சேமிப்பை அதிகரியுங்கள்.மாணவர்கள் பாடத்தில் சிறந்த மதிப்பெண்கள் பெறுவார்கள்.புதுமணத்தம்பதிகள்,பெற்றோர்களாவார்கள்;ஓய்வு பெற்றவர்களுக்கு நிதிசார்ந்த பிரச்னைகள் ,குடும்பப்பிரச்னைகள் தீரும்.கலைத்துறையினர் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்துவர்.

மிதுனம்: அரை அஷ்டமச்சனியால் (அதாங்க,அர்த்தாஷ்டமச்சனி) அவதிப்பட்டவர்கள்,இனிமேல் நிம்மதியைப் பெறுவார்கள்.உங்களின் பிடிவாதத்திற்கும் கூட அங்கீகாரம் கிடைக்கும்.பலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.21.12.11 முதல் 1.7.12க்குள் பலர் சிறந்த வாழ்க்கைத்துணையை அடைவார்கள்.மணமானவர்கள்,தமது வாழ்க்கைத் துணையால் போற்றப்படுவீர்கள்.மிகச்சிறந்த நட்புகளைப் பெறுவீர்கள்.15.12.12 முதல் 23.1.13வரையிலான காலகட்டத்தில் ஒரு தேவையில்லாத பிரச்னையில் மாட்டிக்கொள்வீர்கள்.இதைத் தவிர்க்க,தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவரவும்; அல்லது ஏதாவது ஒரு சித்தர் வழிபாடு செய்துவருக!

கடகம்: ஏழரைச்சனியானது 26.6.2009 அன்றே முடிந்தாலும் பல கடக ராசிக்காரர்களுக்கு இன்னும் ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அமையவில்லை என்பது தான் நிஜம்.சில சமயம்,பலருக்கு சனிபகவான் மூன்றாமிடத்தில் தரவேண்டிய நற்பலன்களை தாமதமாகத் தருவார் என்பது அனுபவ உண்மை.எனவே, இந்த சனிப்பெயர்ச்சியானது கடகராசிக்காரர்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை/தொழிலைத் தரும் என்பது சத்தியம். அதே சமயம்,அர்த்தாஷ்டமச்சனி(அரை அஷ்டமச்சனி)யானது உங்களுக்கு ஆறுமாதங்களுக்குப் பிறகே செயல்படத்துவங்கும்.அனாவசியமான வேலைகள்/நடவடிக்கைகளை அடியோடு விலக்குங்கள்.

முக்கிய குறிப்பு :- இந்த பூமியும்,நமது பாரத நாடும் கடக ராசியில் உதயமானவையே! எனவே, 21.12.11 முதல் டிசம்பர் 2014க்குள்ளான காலகட்டத்தில் பூமியின் நிலப்பரப்பு சுருங்கும்;கடல்பரப்பு அதிகரிக்கும்.நாடுகளின் பேராசையால் உலகப்போர் வரும் சூழல் வந்திருக்கிறது.அதற்கேற்றாற்போல,வருடக்கிரகங்களான குரு,சனி போன்றவை முறையான பெயர்ச்சி ஆகவில்லை;ஆமாம்! மே 2012 அன்று தான் குருபகவான் மீனராசியிலிருந்து மேஷ ராசிக்குப் பெயர்ச்சியாக வேண்டும்.ஆனால்,நடப்பில் மே 2012 இல் மேஷத்திலிருந்து ரிஷபத்துக்குப் பெயர்ச்சியாகிறார். எப்போதும் இரண்டரை ஆண்டுகள் தான் சனிபகவான் ஒரு ராசியில் இருப்பார்;தற்போது மூன்றாண்டுகள் துலாம் ராசியில் இருக்கப் போகிறார்.சராசரிமக்கள் உணவுப்பொருட்களையும்,தங்கத்தையும் சேமித்து வைத்துக்கொள்வது அவசியம்.

கடகராசிக்காரர்களுக்கு 21.12.11 முதல் 1.7.12க்குள் ஒரு நிரந்தரமான கடன் அல்லது நோய் அல்லது எதிரிகள் உருவாகக் கூடிய காலமாக இருக்கிறது.
15.12.12 முதல் 23.1.13 வரையிலான காலகட்டத்தில் எதிர்பாராத விபத்து அல்லது குடும்ப அவமானம் அல்லது கடுமையான பிரச்னை ஏற்படும்.இறைவழிபாடும்,அன்னதானமுமே இதிலிருந்து உங்களைக் காப்பாற்றும் என்பது உறுதி.

சிம்மம்: சிங்க ராசியினரே,21.12.11 முதல் ஏழரைச்சனி முழுமையாக விலகுகிறது;இனிமேல் சுய தொழில் துவங்கலாம்;வேலையிடத்தில் துணிந்து அதிக சலுகைகளுக்கு போராடலாம்;பிரிந்த தம்பதியினர் ஓராண்டுக்குள் ஒன்று சேர்ந்துவிடுவீர்கள்;சாதாரண வேலையில் இனிமேல் இருக்கக் கூடாது.மிகச்சிறந்த நட்புகள் ஏற்படும்.பலருக்கு அரசுவேலை கிடைக்கும்.நீங்கள் இனி எப்போதும் உங்கள் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இராது.சேமிக்கத் துவங்குங்கள்;மே 2012 வாக்கில் வேலை அல்லது இட மாற்றம் சர்வ நிச்சயம்.எதெற்கெடுத்தாலும் குழப்பமடையும் மனநிலையை கைவிடுங்கள்.ஒரு தடவை காசிக்கோ,ஏதாவது ஒரு சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவிலுக்கோ சென்று அவரை வழிபடவும். திருநள்ளாறு அல்லது குச்சனூர் அல்லது திருக்கொள்ளிக்காடு செல்வதை விட,சனிபகவானின் குருவாகிய பைரவரை வழிபட்டால்,சனிபகவான் அளவற்ற மகிழ்ச்சியடைவார். உங்களுக்கு இழந்த அனைத்தும் திரும்பக்கிடைக்கும் என்பதை இந்த மூன்றாண்டுகளில் உணருவீர்கள்.

கன்னி: கடகராசியின் சுபாவங்களைக் கொண்ட கன்னி ராசியினரே,புறக்கணிப்பு என்ற வார்த்தையின் அர்த்தத்தை இந்த இரண்டரை ஆண்டுகளில் உணர்ந்திருப்பீர்கள்.தகுதி குறைந்த வேலையில் இருந்து நீங்கள் பட்ட அவமானங்கள்,கஷ்டங்களை யாரும் நம்ப மாட்டார்கள்.இனி அந்தக் கவலை இல்லை;இருப்பினும், அடுத்த மூன்றாண்டுகளுக்கு அசைவம் சாப்பிடுவதை கைவிட்டுவிட்டு,சனியின் குருவாகிய கால பைரவரை சனிக்கிழமைகளில் வரும் ராகுகாலத்தில்(காலை 9.00 முதல் 10.30) வழிபடவும்.கால பைரவ அஷ்டகத்தை இந்த நேரத்தில் கால பைரவர் சன்னிதியில் வாசிக்கவும்.கால பைரவருக்கு செவ்வரளிமாலை அல்லது உளுந்து வடை மாலை அணிவித்து இவ்வாறு செய்து வருக! மே 2012 இல் வர இருக்கும் ரிஷபகுருப் பெயர்ச்சியானது உங்களுக்காவே உரியது.ஆமாம்! சனியின் தொல்லை இனி 30% மட்டுமே.
21.12.11 முதல் 23.1.13க்குள் வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும்.மாணவர்கள் அவர்கள் எதிர்பாராத மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

துலாம்: நீதி நியாயம் என்பதை தனது சுபாவமாகக் கொண்ட துலாம் ராசியினரே!21.12.11 முதல் டிசம்பர் 2014 வரையிலான மூன்றாண்டுகளில் உங்களுக்கு ஒரு நாளானது ஒரு வருடத்தை விடவும் நீளமாக இருக்கும்.உங்களை சுய தொழில் ஆரம்பிக்க தூண்டி,உங்களின் சேமிப்பைக் கரைத்துவிடும்.பிடித்த வேலை கிடைத்தால்,எதிர்பார்த்த சம்பளம் கிடைக்காது;நல்ல சம்பளம் கிடைக்கும் வேலையாக இருந்தால்,வேலையே பிடிக்காது.இதெல்லாம் மே 2012 முதல் தான் அதுவரையிலும் சனியின் தொல்லை இராது.தவிர,இந்த மூன்றாண்டுகளில் ஜன்மச்சனியின் தொல்லை ஓராண்டு மட்டுமே! என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? குருவின் பெயர்ச்சிகள் உங்களை சனியின் உக்கிரத்திலிருந்து காப்பாற்றும்.21.12.11 முதல் 1.7.12 வரையிலும்,மே 2013 முதல் மே 2014 வரையிலும் குருவின் பார்வை உங்களைப் பார்ப்பதால்,இந்த காலகட்டத்தில் ஜன்மச்சனியின் தாக்குதல் அவ்வளவாக இராது.
நீங்கள் செய்ய வேண்டியது என்னவெனில்,எளிமையான வாழ்க்கைக்கு உங்களை தயார்படுத்துங்கள்.அசைவம் சாப்பிட்டால்,சனியின் தாக்கம் அதிகமாக இருக்கும்;எனவே,அசைவம் தவிர்க்கவும்.உங்களுக்கு எந்த கிரகத்தின் திசாபுக்தி நடந்தாலும்,அது செயல்படாது.அனைத்தும் ஸ்தம்பித்துப்போகும்.எனவே, நீங்கள் முனி வழிபாடு செய்துவரவும்.அல்லது ஏதாவது ஒரு ஜீவசமாதிக்கு தினமும் சென்று வழிபடுவதை ஒரு வழக்கமாக்குங்கள்;அல்லது தினமும் கால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக ஓரளவு நிம்மதியான வாழ்க்கை உறுதி.

விருச்சிகம்:எல்லோரையும் சிரிக்க வைக்கும் விருச்சிக ராசியினரே,உங்களுக்கு ஏழரைச்சனி துவங்கிவிட்டாலும்,21.12.11 முதல் 1.7.12 வரையிலும் மட்டுமே விரையச்சனியின் தாக்கம் இருக்கும்.1.7.12 வாக்கில் ஏற்படப்போகும் குருப்பெயர்ச்சி உங்களை 1.7.12 முதல் ஓராண்டுக்கு பாதுகாக்கும்.அனாவசியமான கிண்டல்களை கைவிடவும்.அளவாக சாப்பிடவும்.மார்க்கெட்டிங் வேலை கிடைத்தால் உடனே சேர்ந்துவிடுங்கள்.ஏனெனில்,அலைந்து திரிந்து வேலை பார்ப்பவர்களை சனிபகவான் அவ்வளவாக பாதிப்பதில்லை;கோபப்படுவதை நிறுத்தவும் அல்லது குறைக்கவும்.ஏனெனில்,அடுத்த ஆறாண்டுகளுக்கு உங்களின் கோபத்திற்கு மதிப்பிராது.பிறரின் காதலுக்கு உதவி செய்யக்கூடாது.தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருக!
15.12.12 முதல் 23.1.13 வரையிலான காலகட்டத்தில் வீட்டை விட்டு நீங்கள் விலகிச்செல்லும் சூழ்நிலை உருவாகும்.எச்சரிக்கை.

தனுசு: 21.12.11 முதல் 1.7.12க்குள் உங்கள் வாழ்வில் மிக முக்கியமான திருப்பு முனை ஏற்படப்போகிறது.நீண்டகாலமாக எதிர்பார்த்து வந்த ஏக்கங்கள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் நிறைவேறிவிடும்.அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்துவிடலாம்.ஆனால்,1.7.12க்குப் பின்னர்தான்,நமது ஆசைகள் நிறைவேறிவிட்டன என்பதை உணருவீர்கள்.

மகரம்: அஷ்டமச்சனி 26.6.2009 அன்றே முடிந்துவிட்டாலும்,பல மகர ராசியினருக்கு இன்னும் ஒரு நன்மையும் கிடைக்க வில்லையே என்று ஏங்குகிறீர்கள் இல்லையா? பத்தாமிடத்துக்கு உங்கள் ராசி அதிபதி வந்தாலும்,அவர் உச்சமாகப்போவதால்,பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.வராக்கடன் வசூலாகும்.2021 வரையிலும் முன்னேற்றம் மட்டுமே உண்டாகும்.திருமணத்தடை நீங்கி,திடீரென திருமணம் நடைபெறும்.சுபச்செலவுகள் ஏற்படும்.அதற்கேற்ப வருமான வழிமுறைகளும் உண்டாகிவிடும்.எல்லா கடன்களையும் அடைத்துவிடலாம்.அவமானம் இனி உங்களை நெருங்காது.
கும்பம்: அஷ்டமச்சனி முடிந்தது.எவ்வளவு பாடு பட்டீர்கள்.உங்களையே சனிபகவான் போதுமான அளவுக்கு ஆழம் பார்த்திருப்பார்.நேர்மையாக வாழ்ந்தவர்களுக்கே இந்த சோதனை எனில்,சுயநலமாக வாழ்பவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள்?
உங்களுக்குரிய அங்கீகாரம் குடும்பம்,வேலை ,தொழில்,சமுதாயத்தில் கிடைக்கத் துவங்கும்.தொழிலை விரிவுபடுத்தலாம்.சேமிப்பு கைகொடுக்கும்.கல்வி,குழந்தைகள்,குடும்பம் என அனைத்திலும் மகிழ்ச்சி,மகிழ்ச்சி,மகிழ்ச்சி மட்டுமே!!தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தால்,கிடைக்க வேண்டிய லாபங்கள் நான்கு மடங்காக கிடைக்கும்.செக் பண்ணிப் பார்க்கலாமா?

மீனம்: சிக்கனத்தின் அவசியத்தை புரிய வைக்கவே இந்த சனிப்பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது.ஆமாம்! 1.7.12 முதல் அஷ்டமச்சனியின் தாக்கத்தை உணருவீர்கள்.அதற்குள் ஒரு நிரந்தர வேலை அமைந்தாலும்,சிறுசிறு விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்கவும்.மூத்தவர்கள்,மூத்த உடன்பிறப்புகளுடன் அனுசரித்துப் போவது அவசியம்.இல்லாவிட்டால் தனிமைபடுத்தப்படுவீர்கள்.சனிக்கிழமை தோறும் அனாதைகள்,உடல் ஊனமுற்றோர்களுக்கு ஒரு வேளை மட்டுமாவது அன்னதானம் செய்யுங்கள்.தினமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.ஒம்சிவசிவஓம்

எனது குருநாதருடைய வாக்கு :-  இந்த சனிப்பெயர்ச்சிப் பலன்கள் முழுமையான பலன்கள் அல்ல;சனிபகவான் சிலருக்கு எதிரிடையான பலன்களையும் தருவது வழக்கம்.இதுவரையிலும் நாம் பிறருக்கு தீங்கு தந்திருந்தால்,அதன் தண்டனையை நமது வாழ்க்கையில் ஜன்மச்சனி,அஷ்டமச்சனியில் அனுபவித்தே ஆகவேண்டும் என்பதே விதி.இதை மாற்றிட முடியாது.சனி பகவான் தான் மனிதர்களின் ஆயுள் மற்றும் தொழிலுக்கு அதிபதி. யாருக்கும் தேவையில்லாமல் தீமை செய்யாதவர்களுக்கும்,நேர்மையானவர்களுக்கு சனிபகவான் ஒரு போதும் கஷ்டங்களைத் தருவதில்லை என்பதே அனுபவ உண்மையாகும்.

சனியின் குரு பைரவர் ஆவார்.பைரவர் வழிபாடு செய்பவர்களை சனிபகவான் தொல்லை தருவதில்லை;ஏனெனில்,சனிக்கு வாத நோயை நீக்கி,கிரகபதவியை அளித்தவர் பைரவர் ஆவார். “பைரவரை யார் தொடர்ந்தும்,தினமும் வழிபடுகிறார்களோ அவர்களை நான் வதைக்க மாட்டேன்” என்று பைரவரிடம் சனிபகவான் சத்தியம் செய்திருக்கிறார்.பைரவர் வழிபாட்டினை 25 நூற்றாண்டுகளுக்குப் பிறகு,மீண்டும் நமக்காக அறிமுகப்படுத்திய எனது குருவின் மானசீக குரு சிவநிறை,பைரவபுத்திரன் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களுக்கும்,அவரது ஆயுள் கால சீடரும்,எனது ஆன்மீக குருவுமாகிய திரு.சிவமாரியப்பன் அவர்களுக்கும் கோடி கோடி கோடி கூகுள் நன்றிகள்!!! மேலும் ஆஞ்சநேய வழிபாடும் சால சிறந்தவை.
ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்

No comments:

Post a Comment